Monday, June 15, 2009

தீர்வு சொல்லுங்கள்....please

இதைப் பற்றி சொல்வதற்கே எனக்கு அவமானமாக இருக்கிறது.. யாரைப் பார்த்தாலும் என்னைக் கேலிப் பொருளாய்ப் பார்ப்பதைப் போல ஓர் உணர்வு.... ''பாபு சார்..'' உங்களில் யாராவது என்னை அழைத்தாலும் இந்த விஷயம் தெரிந்துதான் - இதைப் பற்றி விசாரிக்கக் கூப்பிடுகிறீர்களோ என்று தோன்றுகிறது.. இந்தச் சங்கதி தெரிந்த உலகம் என்னையே சந்தேகக் கண்கள் கொண்டு பார்க்குமோ என்று தோன்றுகிறது.. புழுவைப் போலத் துடிப்பது என்பது புத்தகத்தில் படித்திருக்கிறேன்.. ஆனால் அனுபவிக்கும் போதுதான் புரிகிறது.. ''எப்படியாப் பட்ட குடும்பம் இது.. கண் பட்டது போல ஆயிருச்சு..'' வீட்டுக் கிழவி அரற்றும் போது நொந்து போகத் தோன்றும்..

''உங்களாள பிரச்சனயா.. உங்க அண்ணனாலத் தான.. விடுங்களேன்..'' , என்ற என் மனைவியை முறைத்தேன், ''ஆமா.. இதப் பத்தி நினச்சி ஒங்களுக்கு உடம்புக்கு வந்தா நாதான அல்லாடணும்..'',

'' நீ கொஞ்சம் சும்மா இருக்கியா..'', கத்தினேன்.

''ஏன் எம் மேல எரிஞ்சு விளுகிறிங்க.. எங்கப்பாகூட சொல்லுவார்.. பொம்பள சமாச்சாரமே ஏடாகூடம்தான்னு..'',

''யேய்.. உங்கப்பாகிட்ட சொல்லித் தொலச்சுட்டியா.. கஷ்டகாலம்..'',

''சே.. எனக்கு ரொம்ப அவசியம்.. அதான் ஊரே நாறிப் போச்சே... ஆனா அவரு அரசல் புரசலாக கேள்விப் பட்டா, நா என்ன பண்றது.. ம்ம்.. என்ன பண்ணித் தொலயறது.. பெரியவருக்கு புத்தி இப்படிப் போயிருக்க வேணாம்.. விடுங்க.. சும்மா விசனப் பட்டுக் கிட்டே இருக்காதிங்க..''

அதெப்படி என் அண்ணன் தான் என்று விட முடியும்.. எப்படி இந்தச் செயலை செய்யத் துணிந்தான்.. வெளியே தலை காட்ட முடியாதபடி செய்து விட்டானே.. என் குடும்பம், அவன் குடும்பம் என்று இருக்கும் போது.. பாவம் அண்ணியாரை நினைத்தால்தான் கஷ்டமாக இருக்கிறது.. . பொறுமை, அதிர்ந்து பேசாத குணம் கொண்ட பெண்களில் முதன்மையானவர் என் அண்ணி.. குடும்பக் குத்து விளக்கு .. என் தாயைப் போலத்தான் அவரை நான் பாவிக்கிறேன்.. என் தங்கைகளைக் காட்டிலும் என் மனைவியைக் காட்டிலும் நல்லவர்.. ஒரு வேளை இந்தக் காலத்தில் அப்படி இருப்பதே ஒரு தவறு போலும்.. ஒரு வேளை அண்ணியார் இப்படிப் பட்டவர் என்பதால் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று முடிவெடுத்து விட்டானோ என் அண்ணன்..

எதைப் பற்றியும் கவலைப் படாத இவன், என்ன ஜென்மமோ.. நேரில் பார்த்து நறுக்கென்று கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.. அண்ணான இருந்தால் என்ன... தாத்தாவாக இருந்தால் என்ன.. எப்படி வளர்ந்தோம் இருவரும்.. நம் தாய் தந்தை எப்படி வளர்த்தார்கள்.. எத்தனை ஒழுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்கள்.. எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டுவிட்டானே.. அண்ணியாரைப் பற்றி கூட வேண்டாம்.. தன் கல்லூரியில் படிக்கும் மகள் பற்றிக் கூடவா கவலையில்லை.. இன்னமும் இரண்டொரு வருடங்களில் திருமணம் என்ற பேச்சு வந்து கொண்டிருக்கும் போது இப்படி நாறடித்து விட்டானே..


எனக்கும் அவனுக்கும் வயது வித்தியாசம் ஒரு வருடம் தான் இருக்கும்.. அதனால் அண்ணன் என்பதைக் காட்டிலும் இருவரும் நண்பர்கள் போலத்தான் பழகி வந்தோம்.. நானாவது சற்று தைரியசாலி என்று எங்கள் வீட்டில் பெயர் எடுத்திருக்கிறேன்.. அவன் சற்று பயந்தவன்தான்.. ஆனால் எப்படி இந்த விஷயத்தில் இப்படி நடந்து கொண்டான் என்பது தெரியவில்லை..

சரி.. அவன்தான் ஆண்.. ஆனால் ஒரு பெண் இத்தனை மோசமாகவும், எதற்கும் துணிந்தவளாகவா இருப்பாள்..? அடேயப்பா.. நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது.. எப்படி இவளிடம் விழுந்தான்.. எதை நம்பி இப்படி ஒரு கேவலமான உறவை ஏற்படுத்திக் கொண்டான் என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை.. எப்படியோ நடந்து விட்டது. அவள் ஒரு டைவர்சி.. ஏதோ அலுவல நிமித்தம் பார்த்திருக்கிறான். எப்படியோ பழக்கம் ஆகிவிட்டது. தனியாக ஒரு வாழ்க்கை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறான் என்பது பின்னர் தெரியவந்தது.. அவ்வப்பொழுது அவளுடன் வெளியூர் சென்றும் வந்திருக்கிறான்.. ஓரு முறை கோவை சென்ற போது, எனது அண்ணியாரின் உறவினர் ஒருவர் லாட்ஜில் இருவரையும் பார்த்து விட்டு தகவல் தந்திருக்கிறார்.. பிறகு விஷயம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது.. பிறகு அவளுடனாக தொடர்பை குறைத்துக் கொள்ள, அதன் பொருட்டு அந்தப் பெண்ணுக்கும் இவனுக்கும் சிறிது சிறிதாக மனஸ்தாபம் வந்திருக்கிறது.. அளவுக்கு மீறவே, அந்தப் பெண் இவன் மீது, திருமண ஆசைக் காட்டி ஏமாற்றி விட்டான் என்று போலீசில் புகார் கொடுத்து விட்டாள்.. இன்றோ, விஷயம் விபரீதமாகவும் இழுபறியாகவும் சென்றுவிட்டது.


அன்று அண்ணியாரை வீட்டில் பார்க்கச் சென்றோம்.. பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தார்.. அவருக்கு என்ன நடந்தது என்பதைக் கூட புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லாமல், ஏதோ சித்த பிரமை பிடித்ததைப் போல இருந்தார்.. அண்ணன் தலைமறைவாகப் போய் விட்டான். போலீசு வேறு அடிக்கடி வீட்டிற்கு வந்து கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது.. ஏதோ பத்திரிகையில் வேறு போட்டிருந்தார்களாம்.. பெண்ணை ஏமாற்றிய அதிகாரி தலைமறைவு என்று.. இன்னமும் அவமானப் பட என்ன பாக்கியிருக்கிறது என்று தோன்றியது..

வீட்டில் அண்ணியாரும், அவள் மகள் மட்டும் தனியாக போலீசுடன் போராட முடியவில்லை என்று கேள்விப் பட்டோம்... மகள் அழுது கொண்டேயிருந்தாள்.. எங்களைப் பார்த்ததும் மேலும் தேம்ப ஆரம்பித்து விட்டாள்..

'' அம்மா.. குழந்த மாதிரி.. பொறுமையா இரு.. உனக்கு படிப்பு வேலன்னு நெறய இருக்கு.. கலா.. வா இங்க.. பாரு கொஞ்சம் தேத்து.. '', மனைவியை அழைத்தேன்..

'' வா.. சாப்பிட்டியா..'', மனைவி அவள் தலையை வருடிக் கொடுத்தாள்..

'' சித்தப்பா.. போலீசுல மறுபடியும் போன் பண்ணாங்க.. அப்பா வந்தா உடனே இன்ஸ்பெக்டர வந்து பாக்கணும்னு சொன்னார்.. எதுக்கும் நீங்க போய்ப் பாத்துட்டு வர்றீங்களா.. அந்த பிசி பேசறது ரொம்ப மோசமா இருக்கு.. '',

எனக்கு அந்த க்ஷணத்தில் நாக்கைப் பிடிங்கிக் கொண்டு சாகலாம் போல இருந்தது.. சேச்சே.. இவன் செய்கையால் பலரையும் நோகச் செய்த இவனை சுட்டுக் கொன்றால் என்னவென்று தோன்றியது.. நடுவில் இந்த போலீசு வேறு ‘கட்ட’ பஞ்சாயத்து செய்வதைப் போலத் தோன்றியது..

நான் வந்த விஷயத்தை சொன்னதுமே, காவல் நிலையத்தில் மரியாதையே வேறு மாதிரி தேய்ந்து வந்தது.. '', யாருப்பா.. ஒங்கண்ணனா அவன்.. மரியாதையா நாளைக்க வரச் சொல்லு.. இல்ல அவன் பொண்டாட்டியயும் உன்னையும் உள்ள கொண்டு வச்சுருவேன்.. ஏதோ போனா போவுதுன்னு மரியாத கொடுக்கேன்.. அத காவுந்து பண்ணிக்கறது ஒங்கிட்டயும் ஒங்கண்ணன் கிட்டயும் இருக்கு.. என்ன புரியுதா..'',

வந்த ஆத்திரத்தையும் அழுகையையும் அடக்கிக் கொண்டேன்.. என்ன செய்வது என்று திகைத்து நின்றேன்.. நான்கு பக்கமும் அடைத்துக் கொண்டதைப் போல ஓர் உணர்வு.. அண்ணன் எங்கு போனான் என்பதே புரியாத புதிராக இருந்தது.. யார் வீட்டுக்கு தகவல் வந்தாலும் உடனே தெரிவிக்கும் படி வேண்டினேன். இப்போது அவன் வந்தால்தான் பிரச்சனை ஒரளவாவது தீரும்..

எங்கள் பிரச்சனையை தெரிந்த ஒருவர் ஒரு பிரபலமான வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்றார்.. உண்மையில் உடுக்கை இழந்தவன் கைபோல் என்ற குறளுக்கே முழு அர்த்தத்தை அன்றுதான் புரிந்து கொண்டேன். கிட்டத்தட்ட உடைந்த குரலில் அனைத்தையும் சொன்னேன். '' சார்.. அவனுக்கு என்ன நேர்ந்தாலும் கவலயில்லை.. முதலில் அண்ணி அவர் மகள் ரெண்டு பேருக்கும் மேற்கொண்டு எந்தப் பிரச்சனையும் தொந்தரவும் வரக்கூடாது.. அதான் எங்களுக்கு இப்போ முக்கியம்.. ரெண்டு பேரும் லேடீஸ்.. என்ன பண்ணுவாங்க.. '',

அதன் பின்னர் விஷயங்கள் மள மள வென்று நடந்தேறியது.. காவல் துறையில அவருக்கு இருந்த செல்வாக்கைப் பயன் படுத்தி, ஒரு சமரசத் திட்டத்தை ஏற்படுத்தினார்.

அன்று அந்தப் பெண் அழைக்கப்பட்டாள்.. முதலில் வர மறுத்தவள், பிறகு சம்மதித்தாள்.. அவள் வரும் நாள் அன்று என் மனைவியும் தானும் வருவேன் என்று அடம் பிடித்தாள்.. சரியென்று ஒரு பட்டாளமே கிளம்பி அந்த வழக்கறிஞர் அலுவலகத்திற்குச் சென்றோம்.. அந்தப் பெண் தன்னுடன் ஒரு நபரை அழைத்து வந்தாள்.. யாரோ மாமாவாம்.. அவள் முகத்திலும் சற்று கலவரக் குழப்ப ரேகை..
' இவர்கள் ஏதாவது செய்து விடுவார்களா.. ' என்ற பயம் போலும் என்று நினைத்தேன். இந்தப் பக்கத்தில் நாங்கள்.. எதிர் பெஞ்சில் அந்தப் பெண்ணும், அவளுடன் வந்த நபரும்.. நடுநாயகமாக, வழக்கறிஞர்..

தொண்டையை செருமிக் கொண்டு வழக்கறிஞர் தொடங்கினார், '' இதோ பாரும்மா.. அவர் ஒரு சம்சாரி.. இது உங்களுக்குத் தெரியும்.. தெரிஞ்சே பழகியிருக்கிங்க.. அவர் தன் குடும்பத்தை விட்டுவிட்டு வருவார் என்று நீங்க நெனைச்சேன்னு சொல்றது ஏற்க முடியல.. அப்படியே வாதத்திற்கு ஏற்றாலும், உங்களப் போல இரண்டு பெண்கள்தான பாதிக்கப் படுவார்கள்னு ஏன் நீங்க நெனக்கல.. அப்போ.. இதுல மோடீவ் வேற மாதிரி அதாவது அவருடைய வளத்திற்காகன்னு சொல்லத் தோணுது.. '',

''சாரி சார்.. நீங்க மட்டும் இல்லை.. எல்லாரும் சாவனிஸ்ட்தான்.. '', அந்தப் பெண் விடுவதைப் போல இல்லை..

''மேடம்.. டோண்ட் ரஷ் டு எனி கன்க்ளுஷன்.. எல்லா இஸ்டும் பேசலாம்... ஆனால் அத வசதிக்கு ஏற்றபடி பயன் படுத்தக் கூடாது.. '', என்றார்.

நீண்ட காரசார விவாததிற்குப் பின்னர், அந்தப் பெண்ணுக்கு நஷ்ட ஈடாக ஒரு தொகை அளிக்க ஏற்றுக் கொண்டதன் பேரில் , தான் போலீசில் அளித்த புகாரை திரும்பப் பெற சம்மதித்தாள்..

விட்டால் போதும் என்று என் அண்ணியார் அந்தத் தொகைக்கு ஏற்றுக் கொண்டாரோ என்று நினைத்தேன்.. வெகு நாட்களுக்குப் பின்னர் அவர் முகத்தில் சற்று நிம்மதி தெரிந்தாற் போல இருந்தது.. இத்தனை நடந்தும் என் அண்ணன், கதை நாயகன் இன்று வரை தலையே காட்ட வில்லை..

வரும் வழியில் என் மனைவி காதோரம் கூறினாள், '' ஏங்க.. இந்தப் பொண்ணப் பாத்திங்களா.. அழகுன்னுகூட சொல்ல முடியல.. அப்படியொன்னும் அண்ணியக் காட்டிலும் கலர் இல்லை.. முடி கூட பாருங்க ஏதோ எலி வால் மாதிரி தொங்குது.. இதுகிட்டப் போய் ஒங்கண்ண ஏன் மயங்குனாரு..'', என்றாள்..

''அட ராமா.... கொஞ்சம் சும்மா இரு.... நீ இதுக்குத்தான் வருவேன்னு அடம் புடிச்சியா..'', என்றேன்.. இந்த சமாச்சாரத்தில் எனக்கு ஒரு விஷயம் புரிகிறது. அவரவர் தனக்குத் தோன்றியதைப் போல ஒரு பிரச்சனையைப் பார்ப்பார்களோ என்பதுதான் அது..
----------------------------------------
நன்றி வடக்கு வாசல் இலக்கிய மலர் செப் 2008

No comments: